புஷ்ஷை நீங்களும் அடிக்கலாம்

புஷ்ஷை ஷூவால் அடித்ததை உலகமே பரபரப்பாக விவாதிக்கும் தருணத்தில் சூட்டோடு சூடாக புஷ்ஷை ஷுவால் நீங்களும் அடிக்கலாம் என்பதாக ஒரு ஆன்லைன் விளையாட்டு சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப்பதிவை நான் எழுதும் வரை சுமார் 2198828 பேர் புஷ்ஷை அடித்தவர்கள் என்று பட்டியலிடப்பட்டது. இதில் அடிப்பவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் பார்க்க சுட்டி இதோ:
http://www.kroma.no/2008/bushgame/ Related Posts with Thumbnails

பிரிட்டனும் நிலவுக்கு விண்கலம் அனுப்புகிறது


இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டனும் நிலவுக்கு விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளது. 2012 லிருந்து 2014 காலகட்டத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் இத்திட்டத்திற்கான வரைபடங்கள், ஆகும் செலவு பற்றிய திட்ட அறிக்கையை பிரிட்டன் விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் தற்போது தயாரித்து வருகின்றனர். இது முழுமையடைந்தவுடன் முறைப்படியான அறிவிப்பை பிரிட்டனின் அறிவியல் துறை அமைச்சர் லார்டு டிராய்சன் டிசம்பர் மாதத்தில் வெளியிட உள்ளார்.
இத்திட்டத்திற்கு அனுப்பப்படும் விண்கலத்திற்கு மூன்லைட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்விண்கலம் பூமியைப் போன்று நிலவில் ஏற்படும் நிலவதிர்வுகள், பூகம்பங்கள், நிலவின் மலைகளில் ஏற்படும் அதிர்வுகள் குறித்தும் பிரதானமாக ஆராயும். இதற்கென நான்கு ஆய்வுக் கருவிகள் நிலவின் நான்கு வெவ்வேறு பகுதிகளில் நிலைநிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் தகவல்கள் பூமியின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றையும், புவியதிர்வுகளுக்கும் நிலவுக்குமான தொடர்பு குறித்துமான ஆய்வுகளுக்கும் பெரிதும் துணை புரியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். Related Posts with Thumbnails

யுஎஸ்பி 3.0

தற்போது புழக்கத்திலுள்ள பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை கணினியுடன் இணைக்க பன்னாட்டளவில் உள்ள கணினி வன்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியது யுஎஸ்பி தொழில்நுட்பம். இதை இணைப்பாக கொண்ட சாதனங்களை கணினியில் பொருத்தும்போது நாம் கணினியை அணைத்து இயக்க (ரீபூட்) வேண்டியதில்லை. இணைத்தவுடன் செயல்படத் தொடங்கிவிடுவது இதன் சிறப்பம்சமாகும். 1996ல் கண்டுபிடிக்கப்பட்டது இத்தொழில்நுட்பம். யுஎஸ்பி 1.1, 2.0 போன்ற போர்ட் / பிளக்கின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பாக கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது யுஎஸ்பி 3.0. இதனை அறிமுகப்படுத்திய யுஎஸ்பி-ஐஎப் (யுஎஸ்பி சாதனங்களுக்கான பன்னாட்டு ஒருங்கிணைப்புக் குழுமம்) யுஎஸ்பி 2.0வை விட 3.0வானது பத்து மடங்கு வேகமாக தகவல்களை கடத்தும் திறன்பெற்றது என்று தெரிவித்துள்ளது. முன்பு வெளிவந்த யுஎஸ்பி 1.1, 25 ஜிபி அளவுள்ள டேட்டாவை கடத்த 9.3 மணிநேரத்தையும், யுஎஸ்பி 2.0வானது 13.9 நிமிடத்தையும் எடுத்துக்கொள்ளும். ஆனால் யுஎஸ்பி 3.0வானது எடுத்துக்கொள்ளும் நேரம் 70 வினாடிகள் மட்டுமே. இது இன்றைய கணினி உலகின் வேகத்தை மேலும் அதிகப்படுத்த பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Posts with Thumbnails

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சர்பேஸ் கணினி


மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது வழக்கத்தில் உள்ள கணினியை போலல்லாமல் முற்றிலும் மாறுபட்ட வணிக ரீதியிலான சர்பேஸ் என்ற பெயரில் புதிய கணினியை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதில் தற்போதைய கணினிகளில் பயன்படுத்தப்படும் கீபோர்டு, மௌஸ் போன்றவை தேவைப்படாது. அதற்குப்பதிலாக 30 இன்ச் அகலமான அதன் திரையிலேயே நம்முடைய கட்டளைகளை தொடுவதன் மூலமாகவும், நம்முடைய அங்க அசைவுகளின் மூலமும் செயல்படுத்தமுடியும். தற்போதிருக்கும் தொடுதிரை கணினிகளில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தமுடியும். ஆனால் சர்பேஸ் கணினியை பல நபர்கள் ஒரே நேரத்தில் தொட்டுப் பயன்படுத்தமுடியும். நம்முடைய அங்க அசைவுகளை அறிந்து செயலாற்ற கேமராவும், கணினியை தொடுவது விரலா அல்லது பென்சிலா என்பதை பிரித்தரியக்கூடிய லென்ஸ் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இன்பிராரெட் கதிர் தொழில்நுட்பமும் இருப்பதால் நம்முடைய கைகள் மேஜைக்கு கீழிருந்தாலும் அசைவுகளை அறிந்து செயலாற்றும் திறன் கொண்டது. அதேபோல இக்கணினியை மேஜை மீது மட்டுமல்ல வீட்டுச் சுவர், கதவுகள் என்று நாம் விரும்பும் எந்த இடத்திலும் எளிதில் பொருத்திக்கொள்ளமுடியும். இக்கணினியின் சிறப்புகளை அறிந்து தற்போது சோதனை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுவரும் இக்கணினிக்கு அமெரிக்காவில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுவதாக மைக்ரோசாப்ட் தெரிவிக்கிறது. தற்போது அமெரிக்காவின் பிரபல ஏ.டி.அண்ட் டி., ஹராஹ் என்டர்டெயின்மென்ட், ஸ்டார்பூட் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ், டி மொபைல் போன்ற நிறுவனங்கள் இக்கணினிக்காக முன்பதிவு செய்து காத்திருக்கின்றனவாம். அந்நிறுவங்களுக்கு சப்ளை செய்த பிறகு 3 முதல் 5 ஆண்டுகளில் சர்பேஸ் கணினியை சில்லறை வணிகத்திற்கு கொண்டுவர மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.
Press : http://www.microsoft.com/presspass/presskits/surfacecomputing/default.mspx
Home Page: http://www.microsoft.com/surface/index.html Related Posts with Thumbnails

வலைவிரிக்கும் பில்கேட்ஸ்


மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு புதிய சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பட்ட மேற்படிப்போ, பட்டப்படிப்போ படித்துக்கொண்டிருக்கும் தொழில்நுட்பப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது அடையாள அட்டைகளை அருகில் உள்ள அப்டெக், என்.ஐ.ஐ.டி, பியூசன் போன்ற கணினிப் பயிற்சிப் மையங்களில் காண்பித்தால் அவர்களுக்கு மைக்ரோசாப்ட்டின் மென்பொருள்கள் அடங்கிய இலவச டிவிடி வழங்கப்படும்.
அந்த டிவிடியில் விண்டோஸ் சர்வர் 2003, விசுவல் ஸ்டுடியோ 2008, எஸ்க்யூஎல் சர்வர் 2005, மைக்ரோசாப்ட் எக்ஸ்ப்ரசன் ஸ்டுடியோ, விர்ச்சுவல் பிசி ஆகிய மென்பொருள்கள் அடங்கியிருக்கும்.
2009ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் இந்தச்சலுகை 11, 12ம் வகுப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படவிருப்பதாகத் தெரிகிறது. இதற்கென பிரத்யேக இணையதளம் ஒன்றையும் மைக்ரோசாப்ட், `ட்ரீம்ஸ்பார்க்இண்டியா என்ற பெயரில் துவக்கியுள்ளது. இத்தளத்தின் மூலமும் மேற்கண்ட மென்பொருட்களை பதிவிறக்கம் செய்யமுடியும்.
தற்போது இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ் பல்வேறு பொதுசேவைத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் முகமாக இத்திட்டத்தையும் துவக்கியுள்ளார். இது உலக அளவில் மென்பொருள் துறையில் முன்னணி வகிக்கும் இந்தியாவை தன்னுடைய மென்பொருட்களை கற்க வைப்பதன் மூலம் வேறு மாற்று இல்லாத மாயசூழலை மென்பொருள் சந்தையில் உருவாக்கி அதன் மூலம் மைக்ரோசாப்ட்டை மேலும் பலப்படுத்தும் ஏற்பாடாகவே இதை பார்க்கமுடிகிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளும் ஓப்பன் சோர்சுக்கு மாறிக்கொண்டிருக்கும் சூழலில் மைக்ரோசாப்ட்டின் இந்த சலுகைத் திட்டம் இந்தியாவில் ஓப்பன் சோர்ஸை முடக்கிவைக்கும் முயற்சியே என்று இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். Related Posts with Thumbnails

சதீஷ்தவானிலிருந்து சந்திரனுக்கு...

1963 ம் வருடம் உலக அளவில் அந்நாளைய சோவியத் யூனியனும், அமெரிக்காவும் மட்டுமே விண்வெளியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியிருந்தன. சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எனப் பலவும் விண்வெளி ஆராய்ச்சியில் தங்களையும் இணைத்துக்கொள்ளத் துவங்கிய அதே நேரத்தில் இந்தியாவும் மற்ற நாடுகளைப்போல தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. இந்தியாவிற்கான ஏவூர்திகளை வடிவமைத்து தயாரிக்க வேண்டி அணுசக்தி துறையின் கீழ் புதிய ஆராய்ச்சி நிலையம் ஒன்றை 1963-ல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகில் தும்பாவில் இந்தியா அமைத்தது. இங்கிருந்துதான் இந்தியாவின் விண்வெளிக் கனவுகள் சிறகடிக்கத் துவங்கின. விண்வெளி ஆய்வுப்பணிகளுக்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 1969ல் துவக்கப்பட்டது. இஸ்ரோவால் 1975ல் முதல் இந்திய செயற்கைகோள் ஆர்யபட்டா செலுத்தப்பட்டது. அதன்பிறகு பாஸ்கரா, ரோகிணி போன்ற செயற்கைகோள்களும் ஏவப்பட்டன, அதே நேரத்தில் செயற்கைகோள் ஏவுகலன்களை வடிவமைத்து தயாரிக்கும் ஆய்விலும் முன்னேற்றம் கண்டது. எஸ்எல்வி என்ற குறைந்த திறன் ராக்கெட்டுகளை உள்நாட்டிலேயே உருவாக்கி சோதனைகளை நடத்தத் துவங்கியது. சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநில கடலோரப்பகுதியில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா தீவில் இந்திய ராக்கெட்டுகளை சோதனை செய்வதற்கும், செயற்கைகோள்களை ஏவுதல் போன்றவற்றிற்காக சதீஷ்தவான் விண்வெளி ஆய்வுமையம் அமைக்கப்பட்டது. செயற்கைகோள்களை வடிவமைப்பதில் சிறப்பான வெற்றியையும் அதே தருணத்தில் இந்தியா அடைந்தது. தொலையுணர்வு செயற்கைகோள் ஐஆர்எஸ் மற்றும் தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கான இன்சாட் ரக செயற்கைகோள்களை வடிவமைப்பதில் உலக அளவில் சிறப்பான இடத்தை தற்போது இந்தியா பிடித்திருக்கிறது. இன்றுவரை 50க்கும் மேலான செயற்கைகோள்களை இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே தயாரித்திருக்கிறது. இதில் 10க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன (தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் பல்வேறு இந்திய மற்றும் அயல்நாட்டு முன்னணி தொலைக்காட்சி நிறுவன சேனல்கள் அனைத்துமே இன்சாட் 2சி, 3ஏ, 4ஏ ரக செயற்கைகோள்களின் சி பேண்ட் மற்றும் கேயு பேண்ட் டிரான்ஸ்பேண்டர்களைப் பயன்படுத்தித்தான் அனலாக், டிஜிட்டல் மற்றும் டீடிஎச் போன்ற பல்வேறு முறைகளில் ஒளிபரப்பை செய்துகொண்டிருக்கின்றன. இதில் இன்சாட் 3ஏ டிரான்ஸ்பேண்டர் குத்தகை மூலமாக இஸ்ரோவிற்கு கிடைத்த வருமானம் 5 ஆண்டுகளுக்கு சுமார் 400 கோடி ). எஸ்எல்வி ராக்கெட்டுகள் தயாரிப்பு வெற்றி பெற்றவுடன் ஏஎஸ்எல்வி ராக்கெட்டும், துருவப்பாதை செயற்கைகோள் ஏவுர்தியான பிஎஸ்எல்வியும் அடுத்தடுத்து சோதனை செய்யப்பட்டன. இன்று பிஎஸ்எல்வி வகையில் இந்தியா 12 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அந்த நம்பிக்கையோடுதான் இதே வகை ராக்கெட்டைப் பயன்படுத்தித்தான் சந்திரயான்-1ம் ஏவப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்மிடம் பிஎஸ்எல்வியை விட மேம்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டும் உள்ளது. இதற்கான கிரையோஜெனிக் என்ஜின்களை இந்தியாவே வடிவமைத்துள்ளது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டிற்கான கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பு தொழில்நுட்பம் முன்பே எளிதாக சோவியத் ரஷ்யாவிடமிருந்து கிடைக்கவேண்டியது. அமெரிக்கத் தலையீட்டால் நமக்கு கிடைக்காமல் போனது. தற்போதைய ஜிஎஸ்எல்வி தொழில்நுட்பம் முழுக்க இந்தியாவினுடைய சாதனை. இதனை வடிவமைக்க நமக்கு 10 ஆண்டுகாலமானது. அதிக திறன் பெற்ற இன்சாட் மற்றும் கல்விக்கான எஜுசேட் செயற்கைகோளையும் ஜிஎஸ்எல்வி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது.
சந்திரன் ஆய்வுப்பணிக்கு அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா அனுப்பிய ராக்கெட்டுகளைவிட அளவில் சிறியது பிஎஸ்எல்வி. அதேபோல அதன் செயற்கைகோள் எடை தாங்கும் திறனும் குறைவாகும். ஆனால் நமக்கு எடையோ அளவோ பெரிய அளவில் தடையில்லை. காரணம் சந்திரயான்-1ன் எடை சுமார் 523 கிலோ கிராம். இதனை பூமிக்கு வெளியே தள்ளும் வேலையை மட்டுமே (புவி ஈர்ப்பு விசையிலிருந்து வெளியேறுவது) பிஎஸ்எல்வி ராக்கெட் செய்யப்போகிறது. பிறகு சந்திரயான்-1ல் பொருத்தப்பட்டிருக்கும் பூஸ்டர் ராக்கெட்டுகள் எரியூட்டப்பட்டு சந்திரனை நோக்கிய பயணத்தை விஞ்ஞானிகள் கட்டுப்படுத்தி வழி நடத்துவர். சந்திரயான் திட்டத்திற்கென்றே புதிதாக பெங்களூருக்கு 44 கி.மீட்டர் அருகில் அமைந்துள்ள பெய்லூலு என்ற இடத்தில் கட்டுப்பாட்டு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-1 (Chandrayaan-1)என்ன செய்யும்?
1967 முதல் ரஷ்யாவும், அமெரிக்காவும் பல்வேறு ஆய்வுகளை சந்திரனில் நடத்தியிருந்தாலும் இதுவரை சந்திரனின் முழு வடிவத்திற்கான வரைபடம் உருவாக்கப்படவில்லை. ஆய்வு செய்தவர்கள் சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே பயன்படுத்திக்கொண்டுள்ளனர். அதே போல் சந்திரனின் துருவப்பகுதிகளைப் பற்றி இதுவரை எவ்வித ஆய்வும் நடத்தப்படவில்லை. தற்போது அனுப்பப்படும் சந்திரயான் கலம்தான் துருவப்பகுதியை சுற்றிவந்து ஆய்வு செய்யவிருக்கும் முதல் கலம் என்பதும், சந்திரனுடைய முப்பரிமான தோற்றத்தை வரைவதற்கான முயற்சியை மேற்கொள்ளவிருக்கும் முதல் கலம் என்பதும் பெருமைக்குரிய விஷயமாகும். மேலும் சந்திரனில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆய்வதற்கென 4 கருவிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சந்திராயன் செயற்கைகோளிலிருந்து சந்திரனின் நிலப்பரப்பை தாக்கும் விண்கலத்தின் எடை சுமார் 7 கிலோவாகும். இந்த மோதல் மூலம் சந்திரனின் மண் தன்மை, மேடு, பள்ளம், நீர் ஆதாரங்கள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆய்விற்காக மோதும் கலத்தில் நான்கு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமல்லாது சந்திரனை ஆராய்வதன் மூலம் சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்த மேலும் பல தகவல்கள் கிடைக்கும என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரனில் உள்ள யுரேனியம், ஹீலியம்-3 போன்ற பல்வேறு கனிம வளங்களைப் பற்றிய ஆய்வையும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான் விண்கலம் 2 ஆண்டுகள் வரை சந்திரனை சுற்றி இத்தகைய பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறது. இத்தகைய ஆய்வுகளுக்கென்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5 கருவிகளும், ஐரோப்யிய விண்வெளி கழகத்திடமிருந்து 3 கருவிகளும், நாசாவிடமிருந்து 2 கருவிகளும், பல்கேரியாவிடமிருந்து ஒன்று என மொத்தம் 11 கருவிகள் இடம் பெற்றுள்ளன.
2011-ல் சந்திரயான் -2 விண்கலத்தையும் அத்துடன் சேர்த்து ரோவர் என்ற ரோபோ வாகனத்தையும் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும், சந்திரயான் திட்டத்தில் இந்தியா பெற்ற வெற்றி மிகப்பெரிய வரலாற்று முத்திரை என்றும் இதற்கு அடுத்து 2015-ல் சந்திரயான் -3 என்ற விண்கலத்தை அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், அதில் மனிதர்கள் பயணிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் வர்த்தக ரீதியான செயற்கைகோள்களை ஏவுவதில் 1999 முதல் இந்தியாவும் தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக சந்திரயான் பயணமும் நமக்கு எதிர்காலத்தில் விண்வெளி மூலமாக கிடைக்கவிருக்கும் வளங்களை பெற்றுத்தருவதற்கு உதவும் என்பதையும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். இத்திட்டத்தில் தொய்வோ தோல்வியோ நிகழுமானாலும் அது நம்மை மேம்படுத்திக்கொள்வதற்கானதாகவே இருக்கும். இதற்கு முந்தைய நம்முடைய தோல்விகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களே இதற்கு சாட்சிகள். சந்திரயானும் நமக்கு அப்படிப்பட்ட ஒரு சோதனைக்கட்ட முயற்சிதான். விண்வெளித் துறையில் நம்முடைய இடம் எது என்பதை அறிவதற்கானதாகவும், புதிய தலைமுறை இந்திய விஞ்ஞானிகளுக்கு புத்தாக்கத்தையும், நம்பிக்கையையும் உருவாக்குவதாகவும் அமையும் என்றே இஸ்ரோவும் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது.

புள்ளி விவரம்...
  • பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் அதிக பட்சம் 3,84,000 கி.மீ
  • சந்திராயன் திட்டத்தின் இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திட்டத்திற்கான செலவு 380 கோடி
  • பிஎஸ்எல்வி - சி11 ன் உயரம் 44.4 மீட்டர்
  • சந்திராயன் விண்கலத்தின் மொத்த எடை 523 கிலோ
  • இதில் 11 ஆய்வுக் கருவிகளின் எடை மட்டும் 55 கிலோ
  • சந்திரனில் மோதும் கலத்தின் எடை 7 கிலோ.
  • சந்திரனில் மோதும் கலம் இந்திய தேசிய கொடியையும் சந்திரனில் பதிக்கும். அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பானுக்கு அடுத்து 4வதாக இந்தியக் கொடி சந்திரனில் காட்சியளிக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • ராக்கெட் செலுத்தப்படுவதற்கு முந்தைய 49 மணி நேர கவுண்ட் டவுன் 20.10.2008 திங்கள் கிழமை அதிகாலை 5.20 மணிக்கு துவங்கியது. 22.10.2008 புதன் கிழமை காலை 6.20 மணிக்கு சந்திராயன் - 1 விண்கலத்துடன் பிஎஸ்எல்வி-சி11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது.
  • தற்போது சந்திரயான் - 1 புவிவட்டப்பாதையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.
Related Posts with Thumbnails

ஓப்பன் சோர்ஸ்: மென்பொருள் சுதந்திரம்


நம் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ கணினி வாங்குவதாக இருந்தால் என்ன செலவாகும், கணினி வன்பொருட்கள் (ஹார்டுவேர்ஸ்) வாங்க குறைந்தபட்சம் ஒரு இருபதாயிரம்... அப்புறம் கம்ப்யூட்டர் இயங்குவதற்கான இயங்குதள மென்பொருளும் (ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர்) உங்கள் தேவைக்குகந்த பிற மென்பொருட்களையும் பதிந்து கொடுப்பதற்கு நீங்கள் எவ்வளவு செலவழிப்பீர்கள். ஒரு ஐநூறு அல்லது ஆயிரம் இப்படித்தான் பொதுவாக கணக்கிடுவோம். ஆனால் உண்மையில் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதள மென்பொருளான விண்டோஸின் குறைந்தபட்ச விலை ரூ. நான்காயிரத்து ஐநூறு, கடிதம் எழுத, கணக்கீடுகள், பிரசண்டேசன் போன்ற அன்றாட பயன்பாடுகளுக்கான எம்எஸ் ஆபிஸ் தொகுப்பின் குறைந்தபட்ச விலை ரூ.நான்காயிரத்து சொச்சம், கணினி பாதுகாப்புக்கு வைரஸ் தடுப்பு மென்பொருளுக்கென்று தனியாக ஒரு ஆயிரம் என இதற்கே பத்தாயிரம் ரூபாய் வரை செலவழிக்கவேண்டியிருக்கிறது. இது கூட வீட்டுக்கணினிக்கானதுதான். அலுவலகக் கணினி என்றால் மென்பொருள்களுக்கான செலவு இன்னும் சில ஆயிரங்களை விழுங்கும். ஒரு கணினிக்கு வாங்கியதையே மற்றொரு கணினிக்கும் பயன்படுத்தலாமே என்று நினைத்தால் அது மென்பொருள் நிறுவன பதிப்புரிமை சட்டப்படி குற்றம்.
இது எப்படி இருக்கிறதென்றால், நம் வீட்டில் பழச்செடி வளர்க்க விரும்பி ஒருவரிடமிருந்து விதைகளை வாங்கி பயிரிட்டு வளர்ப்போம். அதிலிருந்து பழம் பறிப்போம், சுவைப்போம் அல்லது விற்போம். இது நடைமுறை. ஆனால் அந்த செடியின் விதைகளை வேறொருவருக்கு விற்கவோ, அல்லது நண்பருக்கு இலவசமாக கொடுக்கவோ நமக்கு உரிமை கிடையாது. என்ன இது அபத்தம் என்கிறீர்களா? அதுதான் இன்றைய வர்த்தக காப்புரிமை சட்டங்களின் லட்சணங்கள்.
ஒவ்வொரு முறையும் கட்டாயம் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு பயன்பாட்டுக்கான கட்டணத்தை கணினி எண்ணிக்கைக்கு ஏற்றவாறு செலுத்தவேண்டும். அப்பொழுதும்கூட அந்த மென்பொருள் நம்முடையதாகாது. பயன்படுத்துவதற்கான கட்டணம் மட்டுமே என்று பதிப்புரிமை சட்டம் சொல்கிறது. பதிப்புரிமைச் சட்டங்களைப் பற்றி மார்க் ட்வைன் இவ்வாறு குறிப்பிடுகிறார். கடவுளால் முடியாதது ஒன்று மட்டுமே; அஃது இந்த உலகத்தில் உள்ள பதிப்புரிமை சட்டங்களில் உள்ள அர்த்தத்தை அறிந்துகொள்வதே. (பதிப்புரிமை சட்டங்கள் யாவும் அனர்த்தமானவை என்பதையே அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.)
இத்தகைய காப்பிரைட் மென்பொருள்களுக்கு மாற்றாக உருவானதுதான் தற்கால காப்பிலெப்ட் (பொதுவுடைமை) மென்பொருள்கள். ஓப்பன் சோர்ஸ் (கட்டற்ற மென்பொருள்) என்ற பொதுவான பெயரிலேயே தற்போது இவை அழைக்கப்படுகின்றன. தொடக்க காலத்தில் அதாவது 1984ல் முதன் முதலாக திறந்த மூல நிரல் (ஜிஎன்யு) திட்டத்தை வெளியிட்டார் ரிச்சர்ட் ஸ்டால்மேன். இவரே இன்றைய ஓப்பன் சோர்ஸ் திட்டத்திற்கு தந்தை என்றும் போற்றப்படுகிறார்.
யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு தளத்தினை (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) உருவாக்கிட 1984 ம் ஆண்டு துவக்கப்பட்டத் திட்டம் குனுத் திட்டமாகும். இவ்வியங்கு தளம் கட்டற்ற மென்பொருளாகும். இதற்கு குனு அமைப்பென்று பெயர். குனுவின் கரு பூர்த்தியடையாததால் லினக்ஸ் கருவுடன் பயன்படுத்தப் படுகிறது. இன்று பலக் கோடிப் பேர் பயன்படுத்தும் இந்த குனு மற்றும் லினக்ஸின் கூட்டமைப்பிற்கு குனு/ லினக்ஸ் என்று பெயர். (சில நேரங்களில் இக்கூட்டமைப்பு லினக்ஸ் எனத் தவறாக அழைக்கப்படுகின்றது.)
ஓப்பன் சோர்ஸ் (தமிழில் கட்டற்ற மென்பொருள்) என்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாமல் சுதந்திரத்தினை அடிப்படையாகக்கொண்டது. இதனை இலவசமாகக் கருதாமல் சுதந்திரமாக கருத வேண்டும் என்கிறார் முதல் ஓப்பன் சோர்ஸை வெளியிட்ட ரிச்சர்ட் ஸ்டால்மேன்.
இது மென்பொருளை பயன்படுத்தும் ஒருவருக்கு அம்மென்பொருளை இயக்க, படியெடுக்க, விநியோகிக்க, கற்க, மாற்றியமைத்து மேம்படுத்தக் கூடிய உரிமைகளைப் பற்றியது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாயின் மென்பொருளொன்றைப் பயன்படுத்தும் பயனொருவருக்கு அதன் மீதுள்ள நான்கு வகையான சுதந்திரத்தைப் பற்றியது:
1. எப்பொருட்டும் நிரலினை இயக்கக் கூடிய சுதந்திரம்
2. நிரல் பணியாற்றும் விதத்தைக் கற்று தமது தேவைக்கேற்றாற் போல் ஆக்கிக் கொள்ளக் கூடியச் சுதந்திரம். முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
3. பிறரும் பயனுற வேண்டி படியெடுத்து விநியோகிப்பதற்கான சுதந்திரம்.
4. ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, நிரலினை மேம்படுத்தி, செய்த மாற்றங்களைப் பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்திரம். முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
மைக்ரோசாப்ட், அடோப், ஆப்பிள், மெஸிண்டோஸ் என்று எண்ணற்ற நிறுவனங்களின் வர்த்தக அறைகூவல்களுக்கு மத்தியில் அனைத்து வசதிகளுடன் ஒரு மென்பொருள் எப்படி கிடைக்கும்? அது நமக்கு எளிதானதாக இருக்குமா? இப்படி நமக்கு எழும் பல கேள்விகளுக்கும் ஏன் முடியாது என்று கேட்டு பல்வேறு மென்பொருட்களையும் உருவாக்கி சாதித்துக் கொண்டிருக்கிறது குனு/லினக்ஸ்.
அப்படியானால் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்கள் இலவசமாக கிடைப்பவை என்றோ அல்லது இணை யத்தில் நமக்கு இலவசமாக கிடைக்கும் (ஃபிரிவேர்) எண்ணற்ற மென்பொருள் கள் யாவும் ஓப்பன் சோர்ஸ் என்றோ நினைத்தால் அது தவறு. ஓப்பன் சோர்ஸ் என்பது பயன்படுத்துபவருக்கான சுதந்திரத்தை பற்றியது. அதனாலேயே சுதந்திர மென்பொருள் என்றும் அழைக்கப்படுகிறது.
ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்கள் அனைத்தும் உலகிற்கும் உலக மக்களுக் கும் பொதுவானவை. தேவைப்படுபவர் கள் இலவசமாகவோ, கட்டண முறையிலோ பெறலாம், உபயோகிக்க லாம் பிறருக்கு விற்பனை செய்யலாம் அல்லது இலவசமாகவும் கொடுக்கலாம். அதில் உங்களது தேவைக்கேற்றவாறு மாற்றங்களும் செய்து கொள்ளலாம். படியெடுக்கலாம். மாற்றியமைத்ததை விற்பனை செய்யலாம் (மூல நிரல்களுடன் கொடுப்பது கட்டாயம்).
இது வியாபாரத்திற்கு உதவாதே என்று நீங்கள் நினைக்கலாம். இது புத்திசாலித்தனத்திற்கும், மென்பொருள் உருவாக்குபவர்களின் திறமைக்குமான விசயம். ஆம், இன்று இணைய உலகின் தகவல் களஞ்சியம் விக்கிபீடியாவும், இணையதளங்களை பார்க்க உதவும் இண்டெர்நெட் பிரௌசரான ஃபயர் பாக்ஸ் -ம் ஓப்பன் சோர்ஸ்-க்கு மிகச்சிறந்த உதாரணங்கள். இவை மட்டுமல்ல விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற்றாக லினக்ஸ், ப்ரீஸ்பையர், எம்எஸ் ஆபிஸ் மென்பொருளுக்கு மாற்றாக ஓப்பன் ஆபிஸ், இணைய தளங்களை பதிவேற்ற இறக்க உதவும் பைல்ஜில்லா, இ-மெயில்களை நிர்வகிக்கும் அவுட்லுக் எக்ஸ்பிரசுக்கு மாற்றாக தண்டர்பேர்டு, வைரஸ்களை நீக்கும் கிளாம்வின், இணையத்தில் கருத்து, கட்டுரை, கவிதை போன்ற நம் சொந்த படைப்புகளை வெளியிட உதவும் வேர்ட்பிரஸ் தளம் என்று இதுபோல இன்னும் இன்னும் பல நூறு மென்பொருட்கள் இலவசமாகவே இணையத்தில் கிடைக்கின்றன. இந்த மென்பொருள்கள் குறித்த தகவல்களைப்பெறுவதற்கு இந்த இணையதளம் உங்களுக்கு உதவும். http://www.fsf.org
Related Posts with Thumbnails

புதிய பிரௌசர் - கூகுள் குரோம் (google chrome)

இண்டெர்நெட் உலகில் தேடல், மெயில், ஆன்லைன் டாக்குமெண்ட், விளம்பரம், சேட்டிலைட் மேப்பிங் என்று பல துறைகளிலும் முன்னணி வகிக்கும் கூகுள் நிறுவனம் தனது அடுத்த படைப்பாக கூகுள் குரோம் என்ற இண்டெர்நெட் பிரவுசரை நேற்று அறிமுகப்படுத்தியது. இன்டர்நெட் பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது, அடிப்படையானது பிரௌசர். இது தற்போது சோதனை பதிப்பாக (Beta) வெளியிடப்பட்டிருக்கிறது.
தற்போது பல வகையான பிரௌசர்கள் வலையுலகில் உலவிக் கொண்டுள்ளன. அதில் அதிகம் பிரபலமானது இன்டர்நெட் எக்ஸ்புளோரர்தான். ஆகஸ்ட் மாத சந்தை நிலவரப்படி இன்டர்நெட் பயன்பாட்டாளர்களில் 73 சதவீதம் பேர் இதைத்தான் பயன்படுத்துகின்றனர். இதுதவிர
பயர்பாக்ஸ் (19.73 சதவீதம் ), சஃபாரி (6.73 சதவீதம் ), ஒபேரா (0.74 சதவீதம் ) ஆகிய பிரவுசர்களும் புழக்கத்தில் உள்ளன. முன்பு இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பங்கு 90 சதவீதமாக இருந்தது. ஆனால்
பயர்பாக்ஸ் வந்த பின்னர் எக்ஸ்புளோரரின் பங்கு குறைந்து விட்டது. இந்நிலையில் மைக்ரோசாப்ட்டுக்கு இன்னொரு அடியாக கூகுளும் பிரௌசர் உலகில் கால் எடுத்து வைக்கிறது. இந்த பிரௌசர் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது. தேடுதல், வீடியோ ஸ்ட்ரீமிங், இமேஜ் சர்ச், இமெயில் உள்ளிட்ட பல பயன்பாடுகளை தற்போது கூகுள் தன் பக்கம் வைத்துள்ளது. இந் நிலையில் தனது 'குரோம் பிரௌசர்' மூலம் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளது கூகுள்.
இன்டர்நெட் உலகம், குரோம் 'பேட்டை' ஆகுமா, கூகுள் சவாலை எக்ஸ்புளோரரும், பயர்பாக்ஸும் சமாளிக்குமா என்பதை என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். குரோம் பிரவுசர் உபயோகித்ததில் சாதாரணமாக தெரிந்த சில நல்ல விஷயங்கள்: தரவிறக்கம் எளிதில் ஆகிறது. தரவிறக்கம் செய்வதற்கு ஃபயர் பாக் போலவே தனி தரவிறக்க அமைப்பு. அட்ரஸ் பாரில் வலை முகவரி தட்டச்சு செய்யும் பொழுதே நாம் தேடும் வலைத்தளம் இதுவா எனும்படி (கூகிள் தேடல் டூல்பார் மாதிரி) குறிப்புகள் பட்டியலிடப்படுகின்றன. ஒரே சன்னலில் பல பக்கங்கள் திறக்கும் வழி (டேப் பிரௌசிங்) இதிலும் இருக்கிறது. வேகமாக வலைகள் திறக்கின்றன.
அப்புறம் சில குறைகளும் தெரிகின்றன. அதில் குறிப்பாக, தமிழ் இணைய பயன்பாட்டாளர்களுக்கு உதவும் இ-கலப்பையை இதில் உபயோகப்படுத்த முடிவதில்லை. பிரௌசர் வழி செயல்படும் மென்பொருள்கள் (அப்ளிக்கேஷன்கள்), குறிப்பாக ஜாவாவினால் இயங்கும் மென்பொருள்கள் செயல்படுவதில்லை. (உதாரணமாக ஆரக்கிள் இ-பிஸினஸ் சூட்). இன்னும் மற்ற குறைகள் இனிமேல்தான் கவனிக்கவேண்டும்.
குரோம் பிரவுசர் தற்போது சோதனை வெளியீடு என்பதால் இந்த குறைகள் முழுப்பதிப்பில் சரிசெய்யப்படலாம் என்று நம்பலாம்.
சரி... ஏன் இந்த பிரௌசரை கூகிள் அவசரம் அவசரமாக வெளியிட்டது தெரியுமா? புதிதாக வெளிவந்துள்ள மைக்ரோசாப்ட் இண்டர்னெட் எக்ஸ்புளோரர்-8 -ல் விளம்பரங்கள் ஆகியவற்றை வடிகட்ட (Filter) செய்யும் வசதி உள்ளது. இதனால் கூகிள் விளம்பரங்கள் (கூகுள் ஆட்சென்
ஸ்) பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதன் காரணமாகவே இண்டர்நெட் எக்புளோரர் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தனது பிரவுசரை களத்தில் இறக்கியிருக்கிறது கூகுள் என்று வியாபார வட்டாரங்கள் கூறுகின்றன.
கூகுள் பிரவுசரை தரவிறக்கம் செய்ய:http://www.google.com/chrome
Related Posts with Thumbnails

60 ஆண்டு கால இந்திய பொருளாதார வரலாறு

Related Posts with Thumbnails

நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்!

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள துங்குஸ்கா ஆற்றுப்படுகை அருகே 1908 ம் ஆண்டு நடந்த ஒரு இயற்கை அதிசயம் 100 ஆண்டுகளாக மர்மமாகவே நீடிக்கிறது. ‘துங்குஸ்கா நிகழ்வு’ என்று அறிவியலறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பற்றிய மிகச்சரியான விளக்கம் இதுவரை யாராலும் அளிக்கப் படாததே இதற்குக் காரணமாகும்.
1908ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி காலை 7.17 மணி. ரஷ்யாவின் மத்திய சைபீரியா பகுதியில் இருந்த மக்கள் அடிவானிற்கு மேலே நீலம் கலந்து வெண்மையுடன் ஒளிரும் பொருள் ஒன்றைக் கண்டனர். நீண்ட வால் போன்ற அமைப்புடன் எரிந்து கொண்டிருந்த அப்பொருளானது மிக வேகமாக வானின் குறுக்கே கடந்து சென்றது. நிலத்திலிருந்து சுமார் 5 லிருந்து 10 கி.மீ உயரத்தில் அது காணப்பட்டது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்மப்பொருள் பொட்காமென்யா துங்குஸ்கா ஆற்றின் அருகே பெரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.வெடிச்சத்தம் ஏறக்குறைய 10 முறை சீரான இடைவெளியுடன் கேட்டதாக கூறப்பட்டது. நேரில் பார்த்தவர்கள் இச்சத்தத்தை பீரங்கி வெடிப்புடனும், இடியுடனும் ஒப்பிடுகின்றனர். இந்த வெடிப்பின் ஆற்றல் ஹிரோஷிமாவில் அமெரிக்கா வெடித்த அணுகுண்டைக் காட்டிலும் 1000 மடங்கு அதிகமானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போது வெளியிடப்பட்ட ஆற்றல் 5 லிருந்து 30 மெகாடன் டிஎன்டி ஆகும். (டிஎன்டி என்பது ட்ரை நைட்ரோ பொலுவீன் என்ற வெடிபொருளைக்குறிக்கும். இது வெடிப்பின் போது வெளிப்படும் ஆற்றலின் அளவாகும்)
இந்த வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட பூமி அதிர்வு அப்பகுதியில் மட்டுமல்லாது பலநூறு மைல்களுக்கு அப்பாலிருந்த இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட உணரப்பட்டது. நிலநடுக்கத்தை அளக்கப்பயன்படும் ரிக்டர் அளவுகோல் அன்று கண்டறியப்பட வில்லை என்றாலும், சுமார் 5 புள்ளிகளாக அந்த அதிர்வு பதிவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. வளிமண்டல அழுத்தத்திலும் இந்த நிகழ்வு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் கூட இத்தகைய அழுத்த வேறுபாடு உணரப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து காந்தப்புயல் ஒன்று வீசியது. 4 மணி நேரம் நீடித்த இந்த காந்தப்புயல் பொதுவாக அணுகுண்டு வெடிப்புக்குப்பின்பு ஏற்படும் மாற்றங்களை ஒத்திருந்தது. பின்னர் பல நாட்களுக்கு வானம் வெள்ளிநிற மேகங்களுடன் காட்சியளித்தது. சைபீரியப் பகுதி முழுவதும் அதையொட்டிய ஐரோப்பிய எல்லைப்புறங்களிலும் இந்த மேகங்கள் உலாவந்தன. இந்த மேகங்களால் இரவு நேரம் கூட வெளிச்சமாகக் காணப்பட்டதால் அந்த இரவுகள் ‘வெள்ளை இரவுகள்’ என்றே பெயர் பெற்றன. வெடிப்பின் போது சிதறிய விண்பொருளின் துணுக்குகள் வானத்தில் பரவியிருந்ததாலேயே இந்த வெளிச்சம் நிலவியதாக கூறப்படுகிறது.
1921 ம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு ஆய்வுக்குழுக்கள் துங்குஸ்கா நிகழ்வு பற்றிய அறிவியல் உண்மைகளை அறிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டன. வெடித்துச்சிதறிய அந்த மர்மமான விண்பொருள் பல மைல்கள் வானில் பயணம் சென்றதை உறுதிப்படுத்திய அவ்விஞ்ஞானிகள் அது விண்கல்லா அல்லது வால்மீனா என்பதில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர். விண்கல்லாக இருந்தால் வெடித்துச் சிதறிய போது அதன் துகள்கள் பூமியில் சிதறியிருக்கும். ஆனால் அப்படிப்பட்ட துகள்கள் எதுவும் ஆய்வுக்குழுவினரின் கண்ணில் படவில்லை. மிகக்குறைவான அளவில் சில விண்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்றாலும் அவற்றைக்கொண்டு ஒரு உறுதியான முடிவுக்கு வர இயலவில்லை. அந்த மர்மமான விண்பொருளானது முற்றிலும் படிக அமைப்பு கொண்ட விண்கல்லாக இருக்க முடியாது என்று இதிலிருந்து தெளிவானது. ஏனெனில் விண்கல்லாக இருந்திருப்பின் நிச்சயமாக அதன் துணுக்குகள் பூமியில் சிதறியிருக்கும்.
1970 ல் ஆய்வு மேற்கொண்ட சோவியத் அறிவியல் மைய விஞ்ஞானி ஜார்ஜ் பெட்ரோவ் என்பவர் துங்குஸ்கா நிகழ்வு குறித்த தனது ஆய்வுமுடிவுகளை வெளியிட் டார். அந்த விண்பொருளானது வால்மீனின் அமைப்பை பெருமளவில் ஒத்திருந்ததாக அவர் தெரிவித் தார். (அதற்கு முன்பே வால்மீன் கொள்கை ஒன்று அறிவியலறிஞர்களால் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது). அதன் அடர்த்தி 0.01 கிராம்/கன செ.மீ (புதிதாகப் பெய்யும் பனிக்கட்டியைக் காட்டிலும் 5-10 மடங்கு குறைவு) ஆக இருந் திருக்கும் என்றுகூறிய பெட்ரோவ், அது முழுக்க, முழுக்க வாயுவால் ஆன பொருளல்ல என்று கூறினார். பனிக்கட்டிகளாலும், சிலிக்கேட் மற்றும் இரும்புத்துகள்களாலும் அது ஆக்கப்பட்டிருக்கலாம் என யூகித்தார்.
வால்மீன் கொள்கை ஓரளவு சரியாக துங்குஸ்கா நிகழ்வை விளக்கினாலும் பல அம்சங்களை விளக்கவில்லை. உதாரணமாக வெளிச்சம் நிறைந்த வானம், வெடிப்புப் பகுதியில் விண்துகள்கள் இல்லாதது குறித்து சரியான விளக்கமளிக்கும் இக்கொள்கை, நில அதிர்வைப்பற்றியோ, உயிரினங்கள், குறிப்பாக தாவரங்களில், ஏற்பட்ட ஜீன் மாறுபாடுகள் குறித்தோ விளக்கவில் லை. அதனால் ‘துங்கஸ்கா நிகழ்வு’ 100 ஆண்டுகளாக ஒரு மர்மமாகவே உள்ளது.
இதன் நூற்றாண்டை நினைவுகூரும் விதமாக கடந்த ஜூன் மாதம் 26 முதல் 28 வரை ரஷ்யாவின் கிராஸ்னாயார்ஸ்க் நகரில் நூற்றாண்டு மாநாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. Related Posts with Thumbnails

போட்டி நிகழ்ச்சிகளும், உளவியல் பாதிப்பும் - இரா. நந்தகுமார்

சிஞ்சினி சென்குப்தா, கொல்கத்தாவைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி. படிப்புடன் நடனத்திலும் ஈடுபாடு கொண்ட சிஞ்சினி பல்வேறு போட்டிகளில் பங்குகொண்டு பரிசுகளைக் குவித்திருக்கிறாள். நடனத்தின் மீதிருந்த அதீத ஆர்வத்தாலும், கொடுத்த புகழுhழும் நடனமும் அவளது வாழ்வின் ஒரு அங்கமாகிப் போனது. வாழ்வும் மகிழ்ச்சியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில்தான் திடீரென வீசியது ஒரு பெரும்புயல். அதன் அதிதீவிரத் தாக்குதல் சிஞ்சினியை தற்போது ஒரு மனநோயாளியாக மருத்துவமனையில் முடக்கிப்போட்டுள்ளது. மேடைகளில் பம்பரமாகச் சுழன்று ஆடிய கை, கால்கள் இப்போது அசைவற்றுக் கிடக்கின்றன. பேச்சும் வருவதில்லை. அப்படி என்னதான் நடந்ததது சிஞ்சினியின் வாழ்வில்?
'ரியாலிட்டி ஷோ' எனப்படும், தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தும் போட்டி நிகழ்ச்சிகள் மக்களிடையே தற்போது வெகு பிரபலம். எப்பாடுபட்டாவது இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வெல்லவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். துவக்கத்தில் பொது அறிவுப் போட்டிகள் என்று ஆரம்பித்து பாட்டுப்போட்டி, நடனப்போட்டி என்று புதிய புதிய வடிவங்களில் இந்நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவை மக்களிடையே இந்தளவுக்கு வரவேற்பு பெறக்காரணம் மிகுந்த ஆடம்பரமாக அவை நடத்தப்படுவதுதான். சினிமா பிரபலங்கள் வேறு நடுவர்களாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்று மேலும் விளம்பரங்களை நிகழ்ச்சிக்குத் தருகிறார்கள். போட்டியில் வெற்றிபெற்றால் கோடீஸ்வரர்களாகலாம் என்றும், தங்கத்திலேயே குளிக்கலாம் என்றும் தொலைக்காட்சிகள் அளிக்கும் விளம்பரங்களில் மயங்கி போட்டியாளர்களும் அதிகளவில் பங்கேற்கிறார்கள். விளைவாக, பங்கேற்பாளர்கள் ஆகிறார்களோ இல்லையோ, நிகழ்ச்சி நடத்துபவர்கள் எளிதாக பல கோடிகளுக்கு அதிபதிகளாகிவிடுகிறார்கள்.
இத்தகைய போட்டிகளில் எப்படியும் வெற்றிபெற்று பரிசுகளை வாங்கிவிடவேண்டும் என்ற தன்முனைப்பு மக்களுக்கு ஏற்படுவது என்பது இம்முதலாளித்துவ சமூக அமைப்பில் சாதாரணமானதுதான். ஆனால் உண்மையில் இதனை சாதாரணமானது என்று ஒதுக்கிவிடமுடியாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புடன் போட்டியில் கலந்து கொள்வதும், அதில் தோற்றுவிட்டால் நிலைகுலைந்து விடுவதும் இந்நிகழ்ச்சிகளில் சாதாரணமாக நாம் காணும் காட்சிகள் என்று கூறும் அவர்கள் என்பதுதான் ஆனால் உண்மையில் அவை மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள். யார் கண்டுகொள்கிறார்கள் இந்தக் கருத்துக்களை? தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
முதலில் வயது வந்தவர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டுவந்த இத்தகைய போட்டிகள் தற்போது சிறுவர், சிறுமிகளுக்காகவும் பிரத்யேகமாக நடத்தப்படுகின்றன. இங்குதான் நாம் சிஞ்சினி சென்குப்தாவை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். அப்பெண்ணும் இதுபோன்ற ஒரு போட்டியில் பங்கேற்கச் சென்றிருந்தாள். முதல் இரண்டு சுற்றுகளில் எளிதாக வெற்றி பெற்றவளுக்கு மூன்றாவது சுற்றில் வந்தது சோதனை. போட்டிக்கு நடுவர்களாக வந்திருந்த சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் சிஞ்சினியின் ஆட்டத்திறனை மதிப்பீடு செய்து அவளைப் போட்டியிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர். அப்போது அவர்கள் முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் சிஞ்சினியை கடுமையாக பாதித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டாள். முன்பே சொன்னவாறு அவளால் கை, கால்களை அசைக்க முடியவில்லை. முதலில் உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர், அங்கிருந்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிஞ்சினியை பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் மருத்துவமனையில் தற்போது சேர்த்துள்ளனர். மருத்துவர்களின் கூற்றுப்படி சிஞ்சினி ஒருவித நரம்புக்கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரியவந்துள்ளது. சிகிச்சை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
எதிலும் முதலாவதாக வரவேண்டும் என்ற உள்ளுணர்வோடு பணம் சம்பாதிக்கும் வெறியும் சேர்ந்து மக்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது என்பது இதுபோன்ற சம்பவங்கள் மூலம் நிரூபணமாகிறது. ஒருபுறம் பெற்றோரின் இத்தகைய பேராசை, மறுபுறம் போட்டி நடுவர்களின் அதிமேதாவித்தனம் நிறைந்த விமர்சனங்கள் ஆகியவை சேர்ந்து குழந்தைகளைத் தாக்குகின்றன. இதனால் அவர்களுக்கு ஒருவித பயம் உருவாகி மன அழுத்தமும், மனரீதியான வேறுவகை பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
துள்ளித்திரிய வேண்டிய வயதில், தேவையற்ற சுமைகளைத் தந்து குழந்தைகளைத் துவளச்செய்யும் இதுபோன்ற நடவடிக்கைகள் இனிமேலும் தொடரக்கூடாது என்பதே சிஞ்சினி சென்குப்தாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம். Related Posts with Thumbnails

"விலைவாசி ஏறிப்போச்சுல்ல..." - ஏ.ஆர்.ராஜா

கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாரெனின்

கல்வி என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று என அரசு பல்வேறு ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறது. ஆனால் கல்வி இன்று எல்லோருக்கும் எட்டும் தூரத்தில் உள்ளதா என்பது கேள்விக்குறியே. கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. ஒரு காலத்தில் தன்னுடைய மகளோ அல்லது மகனோ தேர்ச்சி பெறவேண்டும் என வேண்டிய பெற்றோர்கள், தற்சமயம் இன்னும் பத்து மதிப்பெண்கள் ஏன் குறைவாகப் பெற்றாய் என பிள்ளைகளை குட்டுகின்ற சபாக்கேடான நிலை உருவாகியுள்ளது.

இத்தகைய குட்டு என்பது அடுத்தமுறை அந்த பத்து மதிப்பெண்களைச் சேர்த்து பெறவேண்டி தருகின்ற உற்சாகக் குட்டு அல்ல. மாறாக பத்து மதிப்பெண் குறைவாக பெற்றதால் பத்தாயிரம் ரூபாய் அதிகமாக கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும் என்கின்ற ஆவேச குட்டு ஆகும்.

இத்தகைய சூழ்நிலையில் எனக்கு அறிமுகமான நண்பர் ஒருவரின் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக கோவையில் உள்ள ஒரு சில தனியார் கலைக் கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவிற்கு எத்தகைய கல்வி கட்டணங்கள் பெறப்படுகின்றன. இக்கட்டணங்கள் எந்த அளவுகோலில் நிர்ணயிக்கப்படுகின்றன என தெரிந்துகொள்ள ஒர சிறு விசாரிப்பை தொடர்ந்தபோது அவர்கள் கூறிய கட்டணங்களைக் கேட்டு பிரமித்துப்போனேன்.

கோவையின் மையப்பகுதி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் பாடப்பிரிவிற்கு கல்வி கட்டணம் விசாரித்தபோது, கல்லூரியில் சேர்க்கை கட்டணம் 23,050 ரூபாய் முதல் தவணையாகவும், பிறகு ஆறு மாதத்திற்கு ஒருமுறை 8,000 ரூபாய் கல்விக் கட்டணமாக செலுத்தவேண்டும் என்றும் தெரிவித்தனர். அப்பா(டா) சாமி காப்பாத்து!

அடுத்து கோவையில் மிக பிரபலமான மூன்று எழுத்து இனிசியல் கொண்ட கல்லூரி பீளமேடு பகுதியில் அமைந்துள்ளது. இதில் அதே பாடப்பிரிவிற்கு விசாரித்தபோது, ஆண்டுக் கட்டணம் ரூ.21,000. இதில் இரண்டு வகையுண்டாம். ஒன்று மெரிட், மற்றொன்று சுயநிதி. இரண்டுக்கும் ஆண்டுக் கட்டணம் ஒன்று என்றாலும் சுயநிதி பிரிவிற்கு கூடுதலாக சேர்க்கை கட்டணம் செலுத்தவேண்டுமாம்.

சரி, சேர்க்கைக் கட்டணம் எவ்வளவு என விசாரித்ததில் அது ஆண்டுக் கட்டணத்தைவிட சுமார் 10 முதல் 20 மடங்குவரை தகுதிக்கு தகுந்தவாறு இருக்குமாம் (சுமார் 2 லட்சம் முதல் 5 லட்சம்).

எதற்கும் ஒரு நப்பாசை என கூறுவார்களே அதேபோல மெரிட் சீட் எப்படி நிர்ணயிப்பார்கள் என்று கேட்டபோது, மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவனைவிட இரண்டு மூன்று மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் மட்டும்தான் இந்த கோட்டாவில் அடங்குவார்களாம். அப்படி யாரும் விண்ணப்பம் அளிக்கவிலை என்றால் மெரிட் சீட்களும் சுயநிதியாய் மாறிவிடுமாம் என்றார் கல்லூரி பிரதிநிதி.

இதற்கடுத்து கோவை பாலக்காடு ரோடு கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விசாரித்தபோது, அவர்கள் கூறிய பதிலைக் கேட்டு நிஜமாகவே பயந்துபோனேன்.

நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் எந்த பாடப்பிரிவு எடுத்து படித்திருந்தாலும் பரவாயில்லை, எங்கள் கல்லூரியில் உள்ள அறிவியல், கணினி, வணிகவியல், கணிதவியல் என நீங்கள கேட்கும் எந்த பாடப்பிரிவும் உடனடியாக கொடுக்கிறோம் என்றனர். எத்தனை சீட்டுகள் ஒரு பாடப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எத்தனை காலியாக உள்ளது என எந்த கணக்கும் கிடையாது. சேருபவர்கள் சேரும்வரை சேர்த்துக்கொண்டே இருப்பார்கள் போலிருக்கிறது.

சரி எங்களுக்கு தேவையான வணிகவியல் பாடப்பிரிவிற்காண கட்டணமாக அவர்கள் சொன்னது, சேர்க்கை கட்டணம் ரூ.23,500. பிறகு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பருவக் கட்டணம் ரூ.10,500ம் கூடுதலாக ரூ.2500. எதற்கு இந்த ரூ.2500 என்று கேட்கிறீர்களா? துடைப்பம் வாங்கவாம். அதாங்க பராமரிப்பு செலவிற்காம்.

அடுத்து இதே பாலக்காடு மெயின் ரோட்டில் உள்ள மற்றொரு கல்லூரியில் விசாரித்தபோது, ஏதோ சந்தைக் கடைக்குள் நுழைந்தது போல இருந்தது அவர்களது அணுகுமுறை. நாங்கள் விரும்பிய வணிகவியல் பாடப்பிரிவை கேட்டதும், "அச்சச்சோ! இப்பத்தான் சார் இந்த குரூப் அட்மிஷன் முடிஞ்சுது. ம்! பரவாயில்ல, உங்களுக்காக ஒரு சீட் கஷ்டப்பட்டு (?!) ஏற்பாடு பண்ணித் தர்றோம்" என்றனர் நம்மிடம் கரிசனமாக. சரி, கட்டணம் எவ்வளவு எனக் கேட்டோம். சேர்க்கை கட்டணம் ரூ.24,500. பிறகு ஆறு மாதத்திற்கு ஒருமுறை பருவக் கட்டணமாக ரூ.11,500 கட்ட வேண்டுமாம். ஆளை விட்டால் போதுமடா கிருஷ்ணா! என வெளியேறினோம்.

காலையிலிருந்து அலைந்த சோர்வில் அப்படியே கோவை விமான நிலையத்திற்கு அருகே காளப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் விசாரிக்கச் சென்றோம். அவர்கள் கூறிய கட்டணம் தலையையே சுற்றவைத்துவிட்டது. சேர்க்கை கட்டணம் ரூ.29,000. பிறகு ஆறு மாதத்திற்கொருமுறை ரூ.14,000 பருவக் கட்டணமாம்.

இதற்கே தலையில் கையைவைத்துக் கொண்டிருக்கையில் எங்கள் கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பும் உண்டு என கூடுதல் தகவல் சொன்னார். சரி, அதற்கு எவ்வளவு கட்டணம் என்று விசாரித்தோம். அவர்கள் கூறிய பதில் எங்களை மேலும் ஆச்சரியப்படவைத்தது. பட்டப்படிப்பிற்கு அவர் கூறிய கட்டணத்தில் 3ல் 1 பங்குதான் கட்டணமாம். ஏன் என்று விசாரித்ததில் இப்போதெல்லாம் முதுநிலைப் படிப்பிற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம். அதனால்தான் நாங்களும் கட்டணத்தை குறைத்துவிட்டோம் எனக் கூறினார்கள்.

இப்படிக் கொள்ளையடித்தால் யார்தான் சேர்வார்கள் என மனதில் எண்ணியபடியே வெளிவந்தோம். தொடர்ந்து எங்கு செல்லலாம் என்று யோசித்துவிட்டு, அரசு கலைக் கல்லூரியிலும் சென்று விசாரிப்போம் என்று முடிவு செய்து புறப்பட்டோம். அரசு கலை அறிவியல் கல்லூரியில் அதே வணிகவியல் பாடப்பிரிவிற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பருவக் கட்டணமாக வெறும் ரூ.325 மட்டும் கட்டினால் போதும் என்றபோது எங்களுக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவே இல்லை. அப்போதுதான் அரசின் கையில் இருக்கும் நிறுவனத்திற்கும், தனியார் வசம் இருக்கும் நிறுவனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்திப் பார்க்கமுடிந்தது.

மேலே குறிப்பிட்ட தனியார் கல்லூரிகள் அனைத்திற்கும் 80 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தால் பெறப்படுகின்ற கட்டணங்கள். மதிப்பெண்கள் குறைய குறைய கட்டணம் கூடிக்கொண்டே செல்லும். இது தவிர மேற்கொண்டு போக்குவரத்து கட்டணம், கல்லூரி நடத்தும் விழாக்களுக்கு நன்கொடைக் கட்டணம் எனச் சேர்ந்து மேலும் ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையில் தனியாக பெறப்படும். இத்தனை கட்டணம் வாங்கினாலும் இன்னும் பல கல்லூரிகளுக்கு சுற்றுச்சுவர் கூட கட்டப்படவில்லை. அரசுப் பேருந்து வசதி இல்லாத பாதைகளில் அல்லது பிரதான சாலையிலிருந்து ஒரு சில கிலோ மீட்டர்கள் நடந்து அல்லது தனியாக வாகன வசதி இருந்தால் மட்டுமே செல்லமுடியும் என்கிற நிலையும் உள்ளது. மலையடிவாரங்களில் அமைந்துள்ள சில கல்லூரிகளில் யானைகள் வந்து போகும் பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது.

சரி, அப்படியிருந்தும் ஏன் இவ்வளவு கட்டணம் பெறப்படுகிறது என்று தனியார் கல்லூரி ஊழியர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் ஒன்றுதான் "விலைவாசி ஏறிப்போச்சுல்ல..."

கடந்த சில மாதங்களாக நமது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது, வளர்ச்சியடைந்துள்ளது என தொடர்ந்து ஒவ்வொரு தொலைக்காட்சியாய் தேடித்தேடி பேட்டி அளித்துக்கொண்டிருப்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆமாம், இக்கல்லூரிகளில் கட்டணங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என இப்போதுதான் கண்கூடாகக் காணமுடிகிறது. இந்திய தேசத்தின் கல்விக் கொள்கையை தனியாரிடம் அளித்ததன் மூலம் கல்வி கொள்ளைக்கு வித்திட்டுள்ளது அரசு. கொள்ளை கொள்ளையாய் பணம் பிடுங்கும் தனியார் கல்வி நிறுவனங்களால் காசு இருப்பவனுக்கே கல்வி என்றொரு எழுதப்படாத விதி உருவாகியிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு வரும் காலத்திலாவது இக்கொள்ளையை தடுத்து நிறுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.

மேலும், மத்திய அரசு ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி வரை இலவசக் கல்வி என்பதை உத்திரவாதப்படுத்தவேண்டும். கல்விக்கென மத்திய அரசு நிதியில் 6 விழுக்காடு மாநில அரசு நிதியில் 10 விழுக்காடும் ஒதுக்கி அவற்றை உறுதிப்படுத்தவேண்டியதும் அவசியமாகும்.

"இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்"
-பாரதியார் Related Posts with Thumbnails

உணவு நெருக்கடியும் உலக நிலவரமும்... - இரா. நந்தகுமார்

"தென் அமெரிக்க நாடான ஹெய்ட்டியில் ஒரு மதிய உணவு நேரம்...
சார்லின் டூமாஸ் என்னும் 16 வயது ஏழைப்பெண்ணின் வீடு. குடும்பத்தினர் உணவு உண்ணத் தயாராகிறார்கள். உணவும் பரிமாறத் தயாராக இருக்கிறது. நீங்கள் நினைப்பது போல் 16 வகைக் குழம்பு, கூட்டுகளுடன் ஆவி பறக்கும் அரிசிச் சாப்பாடல்ல அவர்கள் உண்டது. மாறாக மண்ணால் செய்யப்பட்ட ஒரு வகைக் கலவையையே அவர்கள் உணவாக உட்கொண்டனர். ஆம்... வெறும் மண்தான், அதற்கு மேலாக எதுவும் இல்லை."
-மேற்கண்ட செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. உணவுப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள சூழலில் தங்களுக்கு மண்ணைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்கின்றனர் ஹெய்ட்டி மக்கள். அங்கு ஒரு படி அரிசியின் விலை குறுகிய காலத்தில் இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துவிட்டது. அதனால் மண்ணைத் தின்னும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பிரச்சனையின் தீவிரத்தை எடுத்துக்காட்ட ஹெய்ட்டி ஒரு சிறு உதாரணம் மட்டுமே. உலக நாடுகள் பலவற்றிலும் இதே நிலைமைதான். அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை விண்ணை முட்டிக்கொண்டு பறக்கும் சூழலில், வாயையும், வயிற்றையும் கட்டிக் கொண்டு வாழ்வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். பட்டினிச் சாவுகளும், ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படும் சாவுகளும் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. ஐ.நா. சபையின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரப்படி, உலகில் வாழும் 6 பில்லியன் மக்களில் ஆறில் ஒரு பங்கினர் (1 பில்லியன்) கடுமையான பட்டினியால் வாடுகின்றனர். ஆனால் இந்தப் புள்ளி விபரத்தில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவர்களையும் கணக்கில் கொள்வோமேயானால், உலக மக்கள் தொகையில் சரிபாதிப்பேர், அதாவது 3 பில்லியன் மக்கள் போதுமான உணவின்றி வாடுவதாகத் தெரியவந்துள்ளது.
ஐ.நா சபையின் மற்றொரு அறிக்கையைப் பார்த்தோமேயானால் இது மிகையான அளவல்ல என்பது உறுதியாகும். உலகில் தினமும் 18 ஆயிரம் குழந்தைகள் (தோராய அளவு) ஊட்டச்சத்துக் குறைவால் மரணமடைகின்றனர் என்று அவ்வறிக்கை கூறுகிறது. (ஐ.நா, 2007 அறிக்கை)
உற்பத்திக் குறைவு காரணமா?
உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கும், அதனால் ஏற்படும் பட்டினிச் சாவுகளுக்கும் உணவு உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமா என்றால் இல்லை என்பதே பதிலாகும். ஏனெனில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடுகள், உபரியாக உணவு உற்பத்தி செய்யும் நாடுகளில் கூட உணவுக்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துதான் காணப்படுகிறது. உலகின் வளமை மிக்க நாடாகக் கருதப்படும் அமெரிக்காவின் வேளாண்மைத்துறை அந்நாட்டில் 35 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகக் கூறுகிறது. இதில் சுமார் 13 மில்லியன் பேர் குழந்தைகளாவர். ஒருபுறம் மிதமிஞ்சிய உணவு உற்பத்தி, மறுபுறம் கடும் பட்டினி. இன்று பல நாடுகளில் இதுதான் நிலைமை.
உணவு பெறுவது அடிப்படை உரிமையே!
பளபளக்கும் தங்க வைர நகைகள், டி.வி., ஃபிரிட்ஜ் போன்ற எலக்ட்ரிக் சாதனங்கள், கார்கள், டூ வீலர்கள் போன்றவற்றை ஒரு வகையில் ஆடம்பரப் பொருட்கள் என்று கூறலாம். வசதிகளைப் பெருக்குமே தவிர, ஒருவர் உயிர்வாழ இப்பொருட்கள் இன்றியமையாத் தேவைகள் அல்ல. ஆனால் உணவு இவை போன்றதல்ல. அது ஒரு மனிதன் உயிர்வாழ அடிப்படைத் தேவையாகும். இருந்தபோதிலும் உணவு மற்ற ஆடம்பரப் பொருட்களுடன் சேர்த்து ஒரே தராசில் வைத்து நிறுக்கப்படுகிறது. அதாவது நகை, கார்களைப் போலவே காசிருப்பவர்கள் மட்டுமே உணவுப் பொருட்களையும் வாங்க முடியும் என்ற நிலைமை நடைமுறையில் இருக்கிறது. பணம் படைத்தவர்கள் தின்று கொழுக்க, வறியவர்கள் அரை வயிறும், கால் வயிறுமாக உழன்று கொண்டிருக்கிறார்கள். உணவுக்கான அடிப்படை உரிமைகூட மறுக்கப்படுகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பில் வியாபித்திருக்கும் இலாப வெறி இவ்வாறு மனிதர்களை மவுனமாக வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. இன்று நேற்றல்ல பல்லாண்டு காலமாக இந்நிலை தொடர்கிறது. இப்போது ஓரளவு முற்றிவிட்டதுதான் அனைவரது கவனமும் உணவுப் பிரச்சனை மீது திரும்ப உடனடிக் காரணம் ஆகும்.
இந்த உணவு நெருக்கடி பொருளாதார வல்லுனர்களால் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.
1. குறுகிய கால உணவு நெருக்கடி
2. நீண்ட கால உணவு நெருக்கடி
குறுகிய கால நெருக்கடி அல்லது தற்போதைய நெருக்கடி
தற்போதைய கடும் உணவு நெருக்கடி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. விளைவுகள் வேகமாகவும், அதிதீவிரமாகவும் இருந்ததால் அனைவரது பார்வையும் இதன் மேல் விழுந்தது.
உலகச் சந்தையில் சுமார் 60 விவசாய விளைபொருட்களின் விலைவாசி கடந்த ஆண்டு 37 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 23 சதவீதம் அதிகமாகும். ஒட்டுமொத்தமாக 37 சதவீதம் என்றாலும் அடிப்படை உணவுப் பொருட்களான தானியங்களின் விலைவாசி மிகக்கடுமையாக உயர்ந்தது. சோளத்தின் விலை 70 சதவீதம், அரிசி 100 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து காணப்பட்டது. கோதுமை மற்றும் சமையல் எண்ணெயின் விலைகள் சாதனை அளவை எட்டின. இன்னும் தொடர்ந்து எகிறிக்கொண்டே இருக்கின்றன. வரலாறு காணாத இந்த விலை உயர்வுக்குக் காரணங்கள்தான் என்ன?
1. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு:
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வில் பெரும்பங்கு வகிக்கிறது. விவசாயம் இயந்திரமயமாக்கப்பட்டதன் காரணத்தால் விவசாயக்கருவிகளை இயக்குவதற்கும், விளைபொருட்களை மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்திற்கும் பெட்ரோலியம் அவசியத் தேவையாகும். எனவே அதில் ஏற்பட்டுள்ள கடும் விலை உயர்வு உணவுப்பொருட்களின் விலை உயர்வில் எதிரொலிக்கிறது.
2. உயிர்ம எரிபொருட்களின் உற்பத்தி
சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, பெட்ரோலியப் பொருட்களுக்கு மாற்று என்பது போன்ற பிரச்சாரங்களுடன் ஊக்குவிக்கப்படும் உயிர்ம எரிபொருட்களின் உற்பத்தியும் உணவுப் பொருட்களின் விலை உயர்விற்குக் காரணமாகும். பலர் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் வெறும் காட்டாமணக்குச் செடியிலிருந்து மட்டும் இந்த எரிபொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களான மக்காச்சோளம், சோளம், சோயா மற்றும் உணவு எண்ணெயிலிருந்தும் இவை பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு உற்பத்தியான சோளத்தில் 20 சதவீதம் எத்தனால் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. இன்னும் 10 ஆண்டுகளில் தான் உற்பத்திசெய்யும் மொத்த சோளத்தில் மூன்றில் ஒரு பங்கை உயிர்ம எரிபொருள் தயாரிப்புக்கு ஒதுக்கவும் அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்க மக்களின் பிரதானமான உணவான சோளம் இவ்வாறு வேறு வகையில் பயன்படுத்தப்படுவது ஒருவகையான உணவுத் திருட்டே என்று குமுறுகிறார்கள் மக்கள். அமெரிக்கா மட்டுமல்ல ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் உயிர்ம எரிபொருள் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் மூன்றாம் உலக நாடுகளும் மெதுவாக தங்கள் கவனத்தை இந்த மாற்று சக்தியிடம் செலுத்தத் துவங்கியுள்ளன.
உயிர்ம எரிபொருட்கள் உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா என்றால் இல்லை. சுற்றுச்சூழல் மாசுபாட்டைப் பெருமளவில் குறைக்கின்றன என்று பரவலாகப் பிரச்சாரம் செய்யப்பட்டாலும், மாசுபாட்டைக் குறைப்பதில் அவ்வளவு சிறப்பான வகையில் இவை செயல்படுவதில்லை என்கின்றனர் வல்லுனர்கள். படிம எரிபொருட்களுக்குச் சமமான அளவிலோ அல்லது அதைவிட அதிகமாகவோகூட உயிர்ம எரிபொருட்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை விளைவிக்கின்றன என்கிறார்கள் அவர்கள்.
உயிர்ம எரிபொருளுக்காக வளர்க்கப்படும் தாவரங்கள் கரியமில வாயுவை (கார்பன்-டை-ஆக்ஸைடு) பெருமளவில் கிரகித்துக் கொள்கின்றன என்பது உண்மைதான். எனினும் பல தாவரங்கள் தாம் கிரகித்ததைவிட அதிக அளவில் கரியமில வாயுவை வெளிவிடுகின்றன. மேலும் நச்சு உரங்களைப் பயன்படுத்துவது, அறுவடை முறை மற்றும் உயிர்ம எரிபொருள் சுத்திகரிப்பு முறை ஆகியவற்றின் மூலமும் குறிப்பிடத்தக்க அளவு கரியமில வாயு வெளியேறுகிறது. இதைத் தவிர எரிபொருளுக்கான செடிகளை வளர்ப்பதற்காகக் காடுகளும் பெருமளவில் அழிக்கப்படுவதால் இவற்றை (உயிர்ம எரிபொருட்கள்) சுற்றுச் சூழலுக்கு நண்பன் என்று கூறுவதைவிட பகைவன் என்று கூறுவதே சாலப்பொருந்தும்.
உயிர்ம எரிபொருள் தொழில்நுட்பத்தில் இவ்வளவு பின்னடைவுகள் இருந்தாலும் அவற்றின் உற்பத்தி ஊக்குவிக்கப்படுவது ஏன்? இலாப வேட்கையே காரணம் என்று ஒற்றை வரியில் பதில் கூறிவிடலாம். இந்த வகை எரிபொருட்களின் உற்பத்தியில் ஈடுபடும் பகாசுர நிறுவனங்கள், தங்களின் குறுகிய நோக்கத்திற்காக மக்களை ஏமாற்றும் வாதங்களுடன் உற்பத்தியைக் குவிக்கின்றன. மேலும் விளைநிலங்களின் மீதும், சந்தையிலும் இவை ஒரு ஏகாதிபத்தியப் போக்கையே கடைப்பிடிக்கின்றன. எனவே இந்த இலாபபெறி பிடித்த பன்னாட்டு நிறுவனங்களிடம் வளரும் நாடுகள் சிக்கிக் கொள்வது ஒருவகையான காலனியாதிக்கத்தையே ஏற்படுத்தும். எனவே எந்த வகையிலும் சிறப்பாக இல்லாத உயிர்ம எரிபொருட்களை உற்பத்தி செய்யாமலிருப்பதே நல்லது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொருளாதார அறிஞர்களும் தெரிவிக்கிறார்கள்.

3. அதிகரிக்கும் இறைச்சித் தேவை
உலக அளவில் இறைச்சித் தேவை அதிகமானதும் உணவு தானியங்களின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகும். 1961ல் வெறும் 71 மில்லியன் டன்களாக இருந்த இறைச்சித் தேவை, 2007ல் 284 மில்லியன் டன்களாக உயர்ந்துவிட்டது. எனவே இறைச்சிக்காக அதிக அளவில் விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றிற்குத் தீனியாகப் பல இடங்களில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இது தானியங்களின் விலை உயர்வில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
4. இழக்கப்படும் விளைநிலங்கள்
பெரும் எண்ணிக்கையில் விளைநிலங்கள் இழக்கப்படுவதன் காரணமாகவும் உணவு உற்பத்தி குறைந்து விட்டது. இது உணவுப் பொருட்களின் விலை உயர்விற்கு முக்கியக் காரணமாகும். கடந்த சில ஆண்டுகளுக்குள்ளாக சீனாவில் 70 இலட்சம் ஏக்கர் விளைநிலமும், வியட்நாமில் 7 இலட்சம் ஏக்கரும் இழக்கப்பட்டுள்ளன. மேலும் ஏக்கருக்கான உற்பத்தித் திறனும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்நிலைமையானது உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடுகள் மற்றும் ஏற்றுமதி செய்த நாடுகளைக்கூட இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியுள்ளது. இதுவும் உணவுப்பொருட்களின் விலை உயர்வில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
5. இயற்கைப் பேரிடர்கள்
வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைக் காரணங்களும் உணவு உற்பத்தியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிகளவில் கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடான ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வறட்சி, அரிசி ஏற்றுமதி நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட புயல் ஆகியவை இந்தத் தானியங்களின் விலை உயர்வில் எதிரொலித்தன. மேலும் இதே காலகட்டத்தில் (2007) வடசீனாவின் ஒரு பகுதியிலும் வறட்சி ஏற்பட்டு பெருமளவில் உணவு தானியங்கள் இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
6. கள்ளச்சந்தையும், ஊக வணிகமும்
எல்லாவற்றிற்கும் மேலாக ஊகவணிகமும், கள்ளச் சந்தையும் உணவுப் பொருட்களின் விலையை எட்டா உயரத்திற்கு கொண்டு சென்று, அப்பாவி மக்களை வாட்டி, வதைத்து வருகின்றன. ஆன்லைன் முறையில் நடத்தப்படும் இந்தக் கொள்ளையை (ஊக வணிகம்) நிறுத்தாவிட்டால் விலைவாசி என்றென்றைக்கும் கட்டுக்குள் வராது என்பது நிதர்சனம்.
கண்டனக்குரல்களும், குறுகிய காலத் தீர்வுகளும்
விலைவாசி உயர்வுக்கெதிராக உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன. போராட்டங்கள் பெருமளவில் நடத்தப்பட்டு வருகின்றன. மெராக்கோ, செனகல், மெக்சிகோ, உஸ்பெகிஸ்தான், ஏமன் போன்ற நாடுகளிலும், அண்டை நாடான பாகிஸ்தானிலும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுள்ளன. இந்தியாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளின் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்கள் சில குறுகிய காலத் தீர்வுகளை எட்ட உதவியுள்ளன.
சீனா அடிப்படை உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியா, எகிப்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளன. ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல உயிர்ம எரிபொருள் குறித்த தங்கள் பார்வையை ஓரளவாவது மாற்றிக் கொண்டுள்ளன. ஆனால் இவை மட்டுமே உணவுப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தாது. அரசுகள் என்றைக்கு மக்கள் நலனுக்கான பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்துகின்றனவோ அன்றுதான் இப்பிரச்சனை முடிவுக்கு வரும்.
இது நீண்டகால நெருக்கடியின் பிரதிபலிப்பே!
தற்போதைய உணவு நெருக்கடியானது ஆண்டுக்கணக்காக நிலை பெற்றிருக்கும் நீண்டகால நெருக்கடியின் பிரதிபலிப்பாகும். உணவு உற்பத்தி முறையில் ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத அடிப்படை மாற்றங்களே இத்தகைய நெருக்கடியை உருவாக்கியுள்ளன. 1990களில் மூன்றாம் உலக நாடுகளில் அமல்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சந்தையைத் திறந்துவிட்டது. இந்த திறந்த சந்தைப் பொருளாதாரம் விவசாயத்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலக வங்கி, ஐ.எம். எஃப் போன்ற அமைப்புகளால் பரிந்துரை செய்யப்பட்ட வழிகாட்டுதல்களை மூன்றாம் உலக நாடுகள் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றத் துவங்கின. விளைவு? விவசாயிகள் நசுக்கப்பட்டனர். சிறுவிவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
விவசாயத்துறையில் அரசின் தலையீடு இருக்கவேகூடாது என்பதே திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் நிர்பந்தமாகும். விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் இடையேயான உறவில் அரசின் தலையீடு இல்லாமலிருப்பதே சிறந்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உரங்கள், விதைகள் மற்றும் மின்சாரத்திற்கு மானியம் அளிப்பது, விளைபொருட்களைக் கொள்முதல் செய்வது ஆகியவை முதல் உச்சகட்டமாக நிலச்சீர்திருத்தம் செய்வதுவரை அனைத்திற்கும் அரசின் தலையீடு அவசியம். அத்தலையீடுகள்தான் சாமானிய விவசாயிகளின் நலன்களைக் காக்கும். மாறாக, தலையிடாமல் இருப்பது பகாசுர விதைக்கம்பெனிகள் மற்றும் உரக்கம்பெனிகளின் இலாப வேட்டைக்கு விவசாயத்தை இரையாக்குவதேயாகும்.
இரு உதாரணங்கள்:
இத்தகைய தீமை விளைவிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்திய ஹெய்ட்டி நாட்டில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதை ஏற்கனவே பார்த்தோம். அந்நாட்டின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் இதற்குக் கூறும் காரணத்தைக் கேளுங்கள்.
"நாங்கள் (ஹெய்ட்டி அரசு) உணவுப் பொருட்களின் விலையுயர்வுப் பிரச்சனையில் தலையிட்டுத் தீர்வுகாண முடியாது. ஏனெனில் நாங்கள் சந்தை நிர்பந்தங்களுக்கு ஆட்பட வேண்டியுள்ளது", என்கிறார் அவர். (ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம். டிச.9, 2007)
அதே வேளையில் தான் கடைப்பிடித்த புதிய பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட்டு, புதிய பாதையில் செல்லத் துவங்கிய ஆப்பிரிக்க நாடான மாலவி (ஆயடயஎi) நாட்டில் மிகவிரைவான முன்னேற்றங்கள் ஏற்படத்துவங்கின. உரங்களுக்கும், விதைகளுக்கும் கொடுக்காமல் நிறுத்திய மானியத்தை அந்நாடு திரும்ப வழங்கத் துவங்கியது. விவசாயிகள் புது உத்வேகத்துடன் உற்பத்தியில் ஈடுபட்டனர். உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியது. அந்நாட்டின் உணவுத் தேவை பூர்த்தியடைந்ததுடன் அண்டை நாடான ஜிம்பாப்வேக்கும் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கிறது அந்நாடு! (நியூயார்க் டைம்ஸ். டிச.2, 2007)
வல்லரசு நாடுகளின் இரட்டை வேடம்
அனைத்து வளரும் நாடுகளிலும் திறந்த சந்தை முறையை அமல்படுத்த துடிக்கும் பொருளாதார வல்லரசுகள் தங்கள் நாட்டில் இந்த முறையைப் பின்பற்றுகின்றனவா என்றால் இல்லை. அந்த நாடுகளில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் கிடைக்கின்றன; உரங்கள் கிடைக்கின்றன; அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைக்கின்றன. இந்த நாடுகள்தான் மூன்றாம் உலக நாடுகளை விவசாயத்திற்கு மானியம் தரவேண்டாம் என்கின்றன. ஏன் இந்த இரட்டை நிலை? தங்கள் நாட்டின் பன்னாட்டுக் கம்பெனிகளைப் பாதுகாப்பதற்காகத்தான். கார்கில், மான்சாண்டோ மற்றும் பல பகாசுர நிறுவனங்கள் வளரும் நாடுகளில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விற்கின்றன. மானியங்களால் இந்நிறுவனங்களின் சந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்கவே அந்நாடுகள் இவ்வித இரட்டை நிலையை எடுக்கின்றன.
இப்பன்னாட்டுக் கம்பெனிகள் விற்கும் மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்துவது பெரு விவசாயிகளுக்கு மட்டுமே இலாபமளிக்கிறது. சிறு விவசாயிகள் விவசாயத்தைத் தொடரமுடியாமல் தவிக்கிறார்கள். கடன் சுமை வேறு கழுத்தை நெரிக்கிறது. தற்கொலைகள் தொடர்கதைகளாகின்றன. இந்தியாவில் கடந்த ஓராண்டில் மட்டும் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல விவசாயிகள் நிலங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கிப் படையெடுக்கிறார்கள். விளைவாக, நகர்ப்புறங்களில் சேரிகள் பெருகுகின்றன. மக்களின் வாழ்நிலையோ அதலபாதாளத்திற்குச் செல்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் புதிய ஆர்வம்
விதைகளையும், உரங்களையும் விற்பதுடன் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் திருப்தியடையவில்லை. அவை மூன்றாம் உலக நாடுகளில் விவசாய நிலங்களை வாங்கிக் குவிப்பதில் பெருமுனைப்பு காட்டுகின்றன. குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் பிரேசில் நாட்டில் 34,000 ஏக்கர் விளைநிலத்தை வாங்கியுள்ளது. அதில் சுமார் 1600 ஏக்கர் பரப்பளவில் வெறும் சோயாபீன்ஸ் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது! உருகுவேயில் ஒரு நியூசிலாந்து நிறுவனம் ஏறக்குறைய 1 லட்சம் ஏக்கர் விளைநிலத்தை வளைத்துப் போட்டுள்ளது. இதே போல பிரேசில், அர்ஜென்டினா மற்றும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவில் விளைநிலங்களை வாங்கிக் குவித்துள்ளன. இது சிறு விவசாயிகளை மட்டுமல்ல பெரு விவசாயிகளையும் பாதிக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மேலும் இவ்வாறு மிகப்பெரிய பரப்பளவில் பயிரிடப்படும் விளைபொருட்கள் உயிர்ம எரிபொருள் தயாரிப்புக்கே அர்ப்பணிக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அக்கரைமிக்க தீவிரமான செயல்பாடுகள்:
கருத்தியல் ரீதியாக பசியை வெற்றி கொள்வது மிக எளிது. ஆனால் நடைமுறையிலோ அது மிகவும் கடினமான ஒன்றாகும். முதலில் உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். மேம்போக்காக அன்றி உண்மையிலேயே அக்கறையுடன் அரசுகள் இப்பிரச்சனையை அணுகவேண்டும்.
இங்கு ஹியூகோ சாவேஸின் வெனிசுலா அரசு பட்டினிக்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை எடுத்துக்கூறுவது பொருத்தமாக இருக்கும். அந்நாட்டில் ஏழை மக்களின் குடியிருப்புகள்தோறும் உணவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உண்மையிலேயே இத்திட்டம் மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. ஏழைகளின் நலனைக் காக்கும் அக்கறையுடன் செயல்படுத்துவதால், பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அரசுக்கு ஒத்துழைக்கிறார்கள். ஓரளவு வசதி படைத்தவர்கள்கூட தன்னெழுச்சியாகத் தங்கள் வீடுகளில் உணவு சமைத்து உணவு மையங்களுக்குத் தருகிறார்கள். முழுக்க முழுக்க அரசே இத்திட்டத்தைச் செயல்படுத்தினாலும், பொதுமக்களின் ஆர்வத்திற்கு அணை போடாமல் அவர்களையும் சேர்த்துக்கொண்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திவருகிறது. உணவு மையங்களுடன் மலிவு விலை விற்பனைக் கூடங்களும் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன.
பிரேசில் நாட்டில் குடும்ப நிதித்திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு நாளுக்கு 2 டாலருக்கும் குறைவாகச் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு 53 டாலர் வழங்கப்படுகிறது. ஓரளவு வெற்றிகரமாகவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போதைய கடும் நெருக்கடியைச் சமாளிக்க இதுபோன்ற தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சில தொலைநோக்குத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.
கியூபாவைப்போல் நகரத் தோட்டங்களை அமைத்து உணவு உற்பத்தி செய்வது ஒரு தொலை நோக்குத் திட்டமாகும். இதன் மூலம் நகர மக்களின் காய்கறித் தேவையை ஓரளவு முழுமையாக நிறைவு செய்யமுடியும். மிகத் தீவிரமான நிலச்சீர்திருத்தம் மேற்கொள்வதும் இன்றைய அவசர, அவசியத் தேவையாகும். இதன்மூலம் ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் விவசாயத்துறை இருப்பதை முடிவுக்குக் கொண்டுவந்து சிறு விவசாயிகளைக் காக்கமுடியும். மேலும் இங்கு இன்னொன்றையும் வலியுறுத்துவது பொருத்தமாக இருக்கும். பணப்பயிர்களுக்குக் கொடுப்பதைவிட அதிகமான முக்கியத்துவத்தை உணவுப் பயிர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதே அது. Related Posts with Thumbnails

கடன் தள்ளுபடியா? விவசாயம் தள்ளுபடியா?

இந்தியா மத்திய பட்ஜெட் 2008 ல் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விவசாயிகளுக்கு 60,000 கோடி அளவிளான கடன் தள்ளுபடியை அறிவித்திருக்கிறார். வரவேற்கத்தக்க அம்சம்தான் ஆனால் அதனுடைய பின்புலம் எது என்று யாரும் யோசிக்கிறோமா? அதுதான் தெரியவில்லை. அடுத்த தேர்தலுக்கு வாக்களிக்கவிருக்கும் 4 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் குடும்பங்களையும், வருமான வரி செலுத்தும் பெரும்பான்மை நடுத்தர வர்கத்தையும் குறிவைத்துத்தான் வருமான வரி உச்ச வரம்பு உயர்வும், கடன் தள்ளுபடியும் என்பது ஒரு பாமரனின் பார்வையாக இருக்கிறது. ஆனால் பசுமை புரட்சி என்று சொல்லி இந்தியாவெங்கும் விதைக்கப்பட்ட பன்னாட்டு விதைக் கம்பெனிகளின் பலனற்ற ஒருமுறை மட்டுமே பலன் தரும் விதைகளும், நிலத்தை உயிறற்தாக; வி்ஷமானதாக மாற்றும் பூச்சிக்கொல்லி ரசாயண உரங்களும்தான் இந்தியா விவசாயிகளை பிச்சைக்காரர்கள்போல் மாற்றியது என்பதுவே உண்மை. அவ்வப்போது கடன் தள்ளுபடி என்ற சிறு சிறு ஆசைகளைக் காட்டி வாக்கு வங்கிகளைத் தக்கவைத்துக்கொண்டு இந்தியாவின் முதுகெலும்பை முறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கட்சி வித்தியாசம் என்றெல்லாம் பொதுவாக இல்லை. எல்லோரும் புதிதாகத் திட்டங்கள் உருவாக்க மட்டுமே தெரிந்தவர்கள். தவறான திட்டங்களை திருத்த யாரும் தயராக .இல்லை. விவசாயத்தை வளர்க்க என்ன வழி என்றும் அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் என்ன என்பதைப் பற்றியும் பெரிதாக அக்கறை காட்டுபவர்கள் அரசியலில் குறைவு. உலக வங்கியும் அமெரிக்காவும் சொல்வதுதான் அவர்களுக்கு தெரிந்த திட்டங்கள். இப்படித்தான் ஒரு விவசாயி சொன்னாராம் இங்க மனுசனாப் பொறந்ததுக்கு அமெரிக்காவுல மாடாப் பொறந்திருக்கலாம் என்று. எதையெதையோ அவுட் சோர்சிங் செய்யும் இந்தியாவிற்கு மாடு வளர்ப்பதை அவுட்சோர்சிங் பணியாக அமெரிக்கா தந்தால் நிச்சயம் பெரும்பாலான இந்திய விவசாயிகள் மாடு மேய்த்துப் பணக்காரர்களாகக்கூடும்.
சாதாரண விவசாயி 5 ஏக்கர் நிலம் வைத்து உழுது பயிரிட்டு அறுவடை செய்து 6 மாதத்தில் பெரும் லாபம்(?!) இன்று இந்தியாவின் ஐ.டி. துறையில் பணியாற்றும் சாதாரண கடைநிலை ஊழியனின் ஒரு மாத சம்பளம். (அப்பா 6 மாதம் கல்லிலும் முள்ளிலும் போராடி வியர்வை சிந்தி சம்பாரிப்பதைவிட மகன் ஏசி ரூமில் அமர்ந்துகொண்டு ஒரு மாதத்தில் சம்பாதித்துவிடுகிறான் எனும்போது அந்த தந்தையும் மகனும் விவசாயத்தை ஒரு பொருட்டாக மதிப்பார்களா?) இப்படிப்பட்ட சூழலில் நிலத்தை விற்றுவிட்டு பெருநகரம் ஒன்றில் அடுக்கமாடிக் குடியிருப்பு ஒன்றை சொந்தமாக்கிக்கொண்டு வாழத்தான் எந்த மனிதனும் விரும்புவான். அதுதான் நிதர்சனம். அதுதான் தற்போதைய விவசாய சூழலும். போட்ட விதை முளைக்குமா? தெரியாது. மழை வருமா? தெரியாது. பக்கத்து மாநிலத்திலிருந்து தண்ணீர் கிடைக்குமா? தெரியாது. பூச்சிக்கொல்லி அடித்தால் அது நிலத்தை மட்டும் பாதிக்குமா அல்லது நம்மையும் சேர்த்து பாதிக்குமா? தெரியாது. இபபடி பல தெரியாதுகளுக்கு மத்தியில்தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பணமுதலை நிறுவனங்கள் மேலும் பணம் குவிக்க விவசாயத்தையும் விட்டுவைக்காமல் படையெடுத்துவிட்டன. வேளாண் நிலங்கள் இப்போது பெருமளவில் அவர்கள் பெயரிருக்கு மாறிக்கொண்டிருப்பதாக தகவல். தானியங்களை பண்ட மாற்றாக பயன்படுத்திய தேசம். நெல், கேழ்வரகு, கோதுமை, சாமை, ஏலம், மா, பலா, வாழை என்று ஏற்றுமதி செய்த கதையை பன்னெடுங்கால இந்திய வரலாறு பெருமையாக பேசும். ஆனால் இனி அது வரலாறாக மட்டுமே மாறக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை. வருங்காலம் நாம் இறக்குமதி செய்யும் கதையை பேசினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எங்க அப்பாவோட பாட்டி தாத்தாவெல்லாம் அரிசி செஞ்சவங்களாம் அதை எங்க தாத்தா பார்த்திருக்கிறாராம் என்று நமது சந்ததிகள் சொல்லும் காலம் விரைவில் வரக்கூடும். Related Posts with Thumbnails

குப்பை மேலாண்மை (Waste Management)

மிட்டாய் காகிதம் முதல் காலாவதி சாட்டிலைட்டுகள் வரை எத்தனை எத்தனையோ குப்பைகள் பூமியிலும் பூமிக்கு வெளியிலுமாக... இவற்றை நாம் என்ன செய்யப்போகிறோம். உலகம் முழுக்க இதே கேள்விதான். சுற்றுச்சூழல் வல்லுனர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் இதுதான் இன்றைய கவலை. சரி வளர்ந்த நாடுகளில் சிறிய குப்பைகளைப் பற்றிய கவலை பெரிதாக இருப்பதில்லை. காரணம் குப்பைகளை சரியான அவற்றிற்கான இடத்தில்தான் கொட்டவேண்டும் என்பது சட்டமாக மட்டுமல்ல அது ஒரு அழகான பழக்கமாகவும் மக்களிடம் மாறிவிட்டது. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்கள் தொகை பெருக்கமும், சுற்றுப்புறத்தின் மீதான அக்கறை குறைவும், காலதாமதமான திட்டமிடுதலுமே குப்பைகள் பெருகுவதற்கு காரணமாக இருக்கிறது. அதே சமயம் குப்பை கிடங்குகளில் அவற்றை சரியாக மாற்றுப் பயன்பாடுகளுக்கான திட்டங்களோ அல்லது அழிப்பதற்கான நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாமல் சுற்றுப்புற சூழலை கெடுத்து பல புதிய தொற்று நோய்களுக்கு வித்திட்டுக்கொண்டிருக்கிறோம்.

இந்த வி்ஷயத்தில் அரசை மட்டும் குறை கூறுவதில் பயனில்லை. குடிமக்களாகிய நமக்குத்தான் அதில் முழுமையான அக்கறை வேண்டும். குப்பைகளை உருவாக்குபவர்களாக இருப்பவர்கள் நாம்தான். நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் எத்தனை அக்கறை செலுத்துகிறோம். ஆனால் வாசலைத் தாண்டி அதனை நாம் நடைமுறைப்படுத்தியிருக்கிறோமா என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கொள்வோம். பெரும்பாலும் இல்லை என்பதுதான் பதில். இங்கு வெளிநாடுகளில் ஒரு துண்டு காகிதத்தைக் கூட கீழே போடத்தயங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு போய் வழியில் குப்பைத் தொட்டியைப் பார்த்து வீசிவிட்டுச் செல்கிறோம். ஆனால் அதே நாம் இந்தியாவில் போய் இறங்கியவுடன் என்ன செய்கிறோம். சர்வ சாதாரணமாக சாக்லெட்டைத் தின்றுவிட்டு காகிதத்தை அப்படியே வீசிவிட்டுச் செல்கிறோம், சிகரட்டை குடித்துவிட்டு காலுக்கடியில் போட்டு நசுக்கிவிட்டு சாவகாசமாக நடக்கிறோம். ஏதோ ஒரு நாட்டில் சரியாக இருக்கும் நாம், நமது தாய்நாட்டில் இப்படி நடப்பது எந்த விதத்தில் நியாயம்.

சரி இந்தியாவிற்கு வருவோம். இந்தியா சுதந்திர நாடு அங்கே எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம், நாம் நினைத்தபடி நடக்கலாம் என்பதாக நினைப்பதும், மேற்கண்ட செயல்களில் ஈடுபடுவதும் நமக்கான மதிப்பை மட்டுமல்ல நமது சந்ததிகளை நம் செய்கையால் சிறிது சிறிதாகஅழிப்பது போன்றதுதான். நானும் கூட இதுபோன்ற தவறுகளை சில மாதங்களுக்கு முன்பு வரை செய்ததுண்டு. ஆனால் இதன் அபாயத்தை முழுமையாக உணர்ந்தபோதுதான் எனக்கும் புரிந்தது. என் போன்றே தவறு செய்பவர்களும் இதைப் படித்த பிறகாவது தங்களது தவறை திருத்திக்கொள்வார்கள் என்பது எனது நம்பிக்கை. ஆம் எல்லா பிரச்சனைகளுக்கும் அரசே திட்டங்களையும் சட்டங்களையும் ஏற்படுத்திக்கொண்டிருக்க முடியாது. அப்படி திட்டமும் சட்டமும் இயற்றினால் எத்தனைபேர் அதன்படி நடக்கிறோம் என்பதும் கேள்விக்குறிதான். ஆகவே எல்லாவற்றிற்கும் அரசை குறை கூறுவதும் சரியல்ல. பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது, எச்சில் துப்பக்கூடாது போன்ற சட்டங்கள் கூட தமிழகத்தில் கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்டதுதான். ஆனால் அவை நம்மால் கடைபிடிக்கப்படுகிறதா அல்லது அதன் பேரில் எவர் மீதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றால் எதுவும் இல்லை. அப்படியானால் சட்டம் இயற்றியதே கேலிக்குறியதாகிவிட்டதே. Related Posts with Thumbnails

wibiya widget